60 சட்டப்பேரவை இடங்களைக் கொண்ட மேகாலயா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவி 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மார்ச் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய ராகுல், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும் என்றார்.
இதுகுறித்து மேகாலயாவில் உள்ள செயின்ட். எட்முன்ட் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ராகுல் பேசியதாவது:
வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தபோது நாங்கள் வேறு ஜிஎஸ்டி மாதிரியை பரிந்துரைத்தோம்.
பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்விவகாரத்தில் ஆளும் பாஜக எங்களுடைய பேச்சைக் கேட்கவில்லை. அவர்களின் தன்னிச்சையான முடிவுதான் தற்போதுள்ள ஜிஎஸ்டி-யின் வெளிப்பாடு.
திடீரென ஒரு நடுநிசியில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்தினார்கள். அதனை உடனடியாக மக்களின் மீது திணித்துவிட்டனர். ஜந்து வெவ்வேறு வரி முறை என்பது குழப்பமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி குறித்து முழுவதும் தெரியாமலேயே அவர்கள் அதனை அமல்படுத்திவிட்டனர்.
இதனால் மக்களின் மீது தேவையற்ற வரிச்சுமை ஏற்பட்டுவிட்டது. பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பு கேள்விக்குரியாகியுள்ளது. பாஜக-வின் நோக்கம் எல்லாம் 10-15 தொழிலதிபர்களின் வளர்ச்சி மட்டும்தான்.
பெரிய அளவிலான வியாபாரத்தால் பல சலுகைகள் கிடைத்தாலும், சிறு மற்றும் குறுந்தொழில்களும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் லட்சியமாகும். அவர்களுக்கு வங்கிகளும் தேவையான அனைத்து உதவிகளை செய்துத்தர முன்வர வேண்டும் என்றார்.