லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்காஞ்ச்சில் நடைபெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சலீம் புதன்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்காஞ்ச்சில் கடந்த 26-ஆம் தேதியன்று குடியரசு தின விழாவையொட்டி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைந்து மூவர்ணக்கொடியுடன் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
இந்தப் பேரணியானது இஸ்லாமியர்கள் வாழும் பகுதியின் வழியாக சென்ற போது அங்கு எதிர்பாராதவிதமாக மோதல் வெடித்தது. இதில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தான் குப்தா (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இறந்த சந்தான் குப்தாவிற்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தபோதும் அங்கு தொடர்ந்து வன்முறை வெடித்தது. தீ வைப்பு சம்பவங்களின் காரணமாக வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமாகின.
இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில போலீஸ் தொடர் கைது நடவடிக்கையில் இறங்கினர். 00-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கஸ்காஞ்ச்சில் நடைபெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சலீம் புதன்கிழமை அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்