மும்பை: இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என்ற மும்பை பாஜக எம்.பி ஒருவரின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் மலாட் மாவட்டத்தின் மால்வாணி பகுதியில் கடந்த ஞாயிறன்று முகம்மது நபியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று 'ஷியா கப்ரஸ்தான் குழுவின்' ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மும்பை வடக்கு தொகுதியின் எம்.பியான கோபால் ஷெட்டி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசிய விடியோ பதிவானது தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
கிறிஸ்துவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் அந்நியர்கள். அதனால்தான் அவர்கள் நமது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியாவை இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து ஒரே அணியில் இருந்து விடுதலை பெறச் செய்தார்கள். இதில் கிறிஸ்துவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.
இவ்வாறு அவர் அந்த விடியோவில் பேசியுள்ளார்.