புது தில்லி: மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டோப்கேவை, இந்தியப் பிரதமர் மோடி தில்லி ஹைதாராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் பூடான் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாடும் விதமாக, இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
வியாழன் அன்று இந்தியா வந்த டோப்கேவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்நிலையில் தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பூடான் பிரதமர் டோப்கேவை பிரதமர் மோடி வெள்ளியன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.