லக்னௌ: ராமபிரானே நினைத்தாலும் கற்பழிப்புக்களை தடுக்க முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், பைரியா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சுரேந்திர நாராயன் சிங். சனிக்கிழமையன்று தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம், நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து சுரேந்திர நாராயன் சிங் கூறியதாவது:
நாட்டில் நடைபெற்று வரும் கற்பழிப்பு சம்பவங்களை அந்த ராமபிரானே நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதை என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். பெண்களை தன் வீட்டில் உள்ள ஒருவராக அல்லது தனது சகோதரியாக பார்க்கும் எண்ணம் ஆண்களுக்கு வந்தால் மட்டுமே கற்பழிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவரது இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியிலும், கட்சி வட்டாரங்களிலும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக இவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.