மும்பை: மும்பையில் பருவ மழை தொடங்கினாலே, மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்பது போல வெள்ளமும் கரைபுரண்டு ஓடி வந்து விடும்.
இந்த ஆண்டு மட்டும் என்ன வெள்ளம் விடுமுறையா எடுத்திருக்கப் போகிறது.. சரியான நேரத்துக்கு மும்பையில் பருவ மழை தீவிரம் எடுக்க, வழக்கம் போல வெள்ளமும் வந்துவிட்டது.
கடந்த 3 நாட்களாக மும்பையை புரட்டிப் போட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை, ரயில், விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
சாலைகள் குளங்கள் போலவும், தண்டவாளங்களும், ரயில் நிலையங்களும் ஆறுகள் போலவும் காட்சியளிக்கின்றன. வெள்ளத்தின் தீவிரம் அறியாமல் வாகனங்களை எடுத்துக் கொண்டு வந்து சாலையில் நின்றால், அவர்களை வெள்ளம் முகம்மலர வரவேற்கிறது. பிறகென்ன.. பெட்ரோலில் ஓட வேண்டிய வாகனம் எல்லாம் பரிசல் மற்றும் தள்ளுவண்டிகளாகின்றன.
மீட்புக் குழுவினர் முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக டப்பாவாலாக்களும் நேற்று தங்களது பணிக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். வியாழக்கிழமை வரை கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மும்பைவாசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.