மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை பெற்ற விவசாயகள் நிம்மதி அடைவதற்கு பதில் கடும் அதிர்ச்சியே அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தபடி, பயிர்களை இழந்த சுமார் 2000 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
அதில், 773 விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீட்டுத் தொகையாகவும், 669 விவசாயிகளுக்கு ரூ.2 இழப்பீட்டுத் தொகையாகவும், ரூ.3ஐ 50 விவசாயிகளுக்கும், ரூ.4ஐ 702 விவசாயிகளும், 39 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.5ம் பயிர்க் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய தொகையும் அவர்கள் கையில் பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்படாமல், நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்து பயிர்க் காப்பீட்டு நிறுவனம் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது.
பாஜக ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தின் தெஹ்சில் பகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் இருந்துதான் பயிர்க்காப்பீடு கோரி அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருந்தன.
விண்ணப்பங்களை பரிசீலித்து சுமார் 2000 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு பெற்ற விவசாயிகளின் பட்டியலை பீட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் வங்கி அதிகாரி கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11,68,359 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இதில் கேஜ் தெஷில் பகுதியில் இருந்து மட்டும் 15,691 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.51.42 லட்சத்தை பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளனர்.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தங்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீட்டுத் தொகையால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் இது குறித்து கூறுகையில், காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்று இதுபோன்ற தொகையை செலுத்தும், இல்லையென்றால் தேவையே இல்லாமல் காலதாமதம் செய்யும் என்கிறார்கள்.
நாடு முழுவதும் தாமரையை சாகுபடி செய்ய நினைக்கும் கட்சியினர் இவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதையே பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.