புது தில்லி: 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும் என்ற சசி தரூரின் பேச்சுக்கு அவரை மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சசி ரூர் கலந்துகொண்டு பேசுகையில், வரும் 2019- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானைப் போலவே, சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படாத ஒரு பாகிஸ்தான் உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக' மாறிவிடும்’.
மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ அது இல்லாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் சசி தரூரின் பேச்சுக்கு அவரை மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி காங்கிரசின் சசி தரூர் மீது இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு எதுவும் மருத்துவ உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
சசி தரூர் எதையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு விட்டாரா என்று தெரியவில்லை. அவரது கருத்துக்கள் அவரது ஏமாற்றத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. ஹிந்து பாகிஸ்தான் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தானுக்கு எதிரானவரா? அவர் பாகிஸ்தானை மிகவும் சமாதானப்படுத்த முயல்கிறார். அத்துடன் இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க அவரிடம் உதவி கோருகிறார். அவருக்கு பாகிஸ்தானிய பெண் தோழிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ் அமைப்பின் உளவாளிகள்.
காங்கிரஸ் முதலில் ஹிந்து தீவிரவாதம் பற்றி பேசியது. ஆனால் இறுதியில் அது ஒன்றும் இல்லை என்றாகி விட்டது. அதேபோல் இப்போது சசி தரூர் விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும், இல்லை என்றால் அவர்கள் ஏமாற்றத்திலிருக்கிறாரகள் என்று அர்த்தமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.