கர்நாடகத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நீராதாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா அறிவுறுத்தினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கிருஷ்ணா மேலணைத் திட்டத்துக்கு ரூ. 8.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், திட்டப் பணிகள் முழுமையடையாமல் உள்ளன. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்தால், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதோடு, அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
நிகழாண்டு கிருஷ்ணா மேலணைத் திட்டத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். கிருஷ்ணா மேலணைத் திட்டத்தை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். நீர்ப்பாசனத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
எனவே, நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மாநிலத்தின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நீராதாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் தண்ணீரை நாமே பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றார்.