முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவமதிக்கும் வகையில், இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, நெட்ஃபிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாகும் 'சேக்ரிட் கேம்ஸ்' என்ற இணையத் தொடருக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை அத்தொடரிலிருந்து நீக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி கீதா மிட்டல் இந்த வழக்கு விசாரணையிலிருந்து காரணம் எதுவும் தெரிவிக்காமல் விலகினார். இதனையடுத்து, இந்த வழக்கு வேறொரு அமர்வின் கீழ் வியாழக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.
காவல் நிலையத்திலும் புகார்: இதே சம்பவத்திற்காக 'சேக்ரிட் கேம்ஸ்' இணையத் தொடரின் தயாரிப்பாளர் மீது கல்கத்தாவின் கிரீஸ் பார்க் காவல்நிலையத்தில் ராஜீவ் சின்ஹா என்ற காங்கிரஸ் தொண்டர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சயீப் அலி கான், நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் இந்தத் தொடர், ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்கும்,நிழலுலக தாதாவிற்கும் இடையே நடைபெறும் மோதலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.