நடு வானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த மிக பயங்கர விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை - ஹைதராபாத் மற்றும் பெங்களூர் - கொச்சின் இடையே இயக்கப்படும் இரண்டு இண்டிகோ விமானங்கள் சுமார் 328 பயணிகளுடன் நடுவானில் நேற்று பயணித்துக் கொண்டிருந்தன. அப்போது விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு விமானங்களின் விமானிகளுக்கும் ஒரு எச்சரிக்கைச் செய்து வந்தது.
இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக பாதையை மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டது. இரு விமானங்களின் விமானிகளும் துரிதமாக செயல்பட்டு தங்களது பாதையை மாற்ற, இரண்டு விமானங்களும் சுமார் 200 அடி தொலைவில் தங்களது பயணத்தை திசை திருப்பிக் கொண்டு பெரும் விபத்தைத் தவிர்த்தன.
ஒரு மணி நேரத்துக்கு பல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு விமானங்களும் வெறும் 8 கிலோ மீட்டர் தூரத்தில் நேருக்கு நேர் சந்தித்தன.
அதாவது 36 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டிய கோவை - ஹைதராபாத் விமானமும், 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டிய பெங்களூர் - கொச்சின் விமானமும் எதிர்பாராதவிதமாக முறையே 27,300 மற்றும் 27,500 அடி உயரத்தில் பறந்ததே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.