பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையேயான உறவில் உரசல்கள் நிலவி வரும் வேளையில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பிகாரில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் சமீப காலமாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியிரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. .
அதேசமயம் பாஜக தேசிய தலைவரான அமித் ஷா வரவிருக்கும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முவைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து வருகிறார். அதன்படி அவர் பிகார் வந்துள்ளார்.
இந்நிலையில்தான் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இடையே சந்திப்பு வியாழன் அன்று நிகழ்ந்துள்ளது.
பாட்னா அரசு விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது அமித்ஷாவுக்கு சிறப்பான காலை உணவு விருந்தாக அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவுடன் பிகார் மாநில பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர்.
வியாழன் இரவு மீண்டும் இவ்விரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.