கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் ஜூலை 20-ஆம் தேதி முதல்வர் குமாரசாமி சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.
கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 117.70 அடியாகவும், கபினி அணையின் நீர்மட்டம் 2281.09 அடியாகவும் உள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வியாழக்கிழமை விநாடிக்கு 37,783 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அடுத்த ஒருவாரத்தில் அணையின் அதிகபட்ச நீர்மட்டமான 124.80 அடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, கபினி அணையின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச உயரமான 2284 அடியை வெகுசில நாள்களில் அடையும்.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 47,547 கன அடியாக உள்ளது. அதேபோல, அணையில் இருந்து விநாடிக்கு 48,375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த இரு அணைகளும் வெகுவிரைவில் நிரம்பினால், ஜூலை 20-ஆம் தேதி சிறப்பு பூஜை செய்து வழிபட முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.