லக்னௌ: தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்ஸாபூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
விவசாயிகளின் பெயரால் இன்று அரசியல் நடத்துபவர்களுக்கு தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க நேரமில்லாமல் போனது. ஆனால், எங்கள் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரண்டரை மடங்கு உயர்த்தியுள்ளோம்.
அதேபோல அவர்களது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது ஏன் என்பதை மக்கள் அவர்களை நோக்கி கேட்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான ஒரு சர்வதேச ஆய்வு தொடர்பான புள்ளி விபரத்தில் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஐந்து கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதே ஆய்வின் முடிவு மட்டும் எங்கள் அரசுக்கு எதிராக வந்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் எங்கள் ஆட்சியை கடுமையாகத் விமர்சித்திருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் பல்வேறு மக்கள் திட்டங்களை விரைவு செய்து பணிகளை முடித்துள்ளோம். அதன் பலனை நாட்டு மக்கள் அனைவரும் இன்று பார்க்கலாம்.
3500 கோடி ரூபாய் மதிப்பிட்டில் இன்று தொடங்கப்பட்ட பன்சாகர் பாசன திட்டத்தின் மூலம் மிர்ஸாபூரில் உள்ள ஒன்றரை லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும்.
தங்களது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல் கோப்புகளின் மேல் ஏறி அமர்ந்திருந்தவர்கள், இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.