கனடாவின் பிராம்ப்டன் நகரில் வசித்துவந்த இந்தியரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கனடாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு பல்வீந்தர் சிங் (27) குடியேறினார். லாரி ஓட்டுநராக அவர் இருந்து வந்தார். பிராம்ப்டன் நகரில் அவரது வீட்டுக்குள் புதன்கிழமை மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 2 பேர் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறோம். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
அவரது நண்பர் முகநூலில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சில தினங்களுக்கு முன்புதான் பல்வீந்தர் சிங்குக்கு பிறந்த நாள் வந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர் உயிருடன் இல்லை என்பதை எண்ணி வருந்துகிறேன்.
என்ன காரணத்துக்காக அவர் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை. அவரது இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை பிராம்ப்டன் நகரில் 11 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.