சண்டிகர்: திருமணமான 22 வயது பெண், பஞ்ச்குலா அருகே உள்ள மோர்னி ஹில்ஸ் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து சுமார் 40 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்ய ஹரியாணா காவல்துறை மறுத்துவிட்டதால், சண்டிகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஹரியாணா காவல்துறைக்கு மாற்றியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, மோர்னி ஹில்ஸ் பகுதியில் விடுதி மற்றும் பண்ணை வீடாக இருக்கும் ஒரு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தையல்காரர். இவருக்கு முக்கியக் குற்றவாளியான சுனில் குமார் என்கிற சன்னியை தெரியும். தனது பண்ணை வீட்டில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு வருமாறு பாதிக்கப்பட்டப் பெண்ணை சன்னி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சன்னியும் அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு 3 நாட்கள் அவரை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து 40 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
ஒரு வழியாக அந்த வீட்டில் இருந்து தப்பி வந்த பெண், கணவரை தொடர்பு கொண்டு மகளிர் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். அங்கே அவர்களது புகாரை வாங்க மறுத்ததால், சண்டிகார் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்து கொண்ட காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் கூட்டு பலாத்காரத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
உடனடியாக பண்ணை வீட்டை சோதனை நடத்திய சண்டிகர் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. வழக்கைப் பதிவு செய்ய மறுத்த மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.