பிரதமர் மோடி தனது அதிகார அகந்தையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் பதிலளித்துப் பேசியதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:
ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவை தனியாக பிரித்த பிறகு, மாநிலத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசு நிவர்த்தி செய்யும் என 5 கோடி மக்களும் நம்பியிருந்தனர். தேர்தலின்போது அதுதொடர்பான பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், அதில் எதையுமே இன்று வரை நிறைவேற்றவில்லை. அதுபற்றி பிரதமர், தனது உரையில்கூட எதுவும் குறிப்பிடவில்லை. அதிகார அகந்தையை அவர் வெளிப்படுத்தியிருப்பதையே இது காட்டுகிறது.
தற்போது மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் கடைசி ஆயுதமாக இருக்கலாம். ஆனால், அவைக்கு வெளியே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தெலுங்கு தேசம் முன்னெடுத்துக் கொண்டே இருக்கும் என்றார் சந்திரபாபு நாயுடு.