போதிய உறுப்பினர்களின் வருகையின்மையால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அமைச்சர்கள் 2 பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். எஞ்சியுள்ள பாஜக எம்.பி.க்கள் எங்கே?' என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஜய் கோயல், எம்.பி.க்களை அழைத்து வருவதற்காக அவையை விட்டு வேகமாகச் சென்றார்.
ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து அவை அலுவல்களை நடத்த வேண்டுமானால் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவை பிற்பகல் 3.30 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. அவையில் அலுவல்களை முன்னெடுக்க குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள் தேவை. ஆனால், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 23 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
முன்னதாக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை சம்பந்தப்பட்ட உறுப்பினர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.