உத்தரப் பிரதேச மாநிலம், காஸியபாத் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச காஸியபாத்தில், மிஸாஸ் காடி எனும் பகுதியில் 5 அடுக்கு கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் எதிர்பாராத விதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இதையடுத்து, தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த நிலையில் 1 சடலம் மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை எளிதில் கண்டுபிடித்து முதலில் அவர்கள் மீட்கப்படலாம்.
கடந்த 17-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் 9 பேர் வரை உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 20-ஆம் தேதி நொய்டாவில் நடைபெற்ற இதே போன்ற மற்றொரு கட்டட விபத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இதன்மூலம், கடந்த 10 தினங்களுள் இது 3-ஆவது கட்டட விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கட்டட விபத்துகள் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அம்மாநில அரசு இந்த விவகாரத்தில் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.