மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் புது தில்லியில் அக்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உட்பட கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் சோனியா பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுலுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும்.
சமீபகாலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாட்டின் ஏழைகளுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதை காட்டுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகார மற்றும் பணபலத்தை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்தால் மட்டுமே முடியும் என்று கூறியதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.