சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார், முன்பு இந்த குற்றப்பத்திரிகையை அரசு சிறப்பு வழக்குரைஞர்கள் நீதேஷ் ராணா, என்.கே. மட்டா ஆகியோர் தாக்கல் செய்தனர்.அந்த குற்றப்பத்திரிகையில், வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா, தரணி உள்கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வகமுல்லா சந்திரசேகர், ராம் பிரகாஷ் பாட்டியா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த குற்றப்பத்திரிகை மீது வரும் 24ஆம் தேதி பரிசீலனை நடத்தப்படும் என்று நீதிபதி அரவிந்த் குமார் அறிவித்தார்.
மத்திய அமைச்சராக வீரபத்ர சிங் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி மதிப்புக்கு அவர் சொத்துகளை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், வீரபத்ர சிங், அவரின் மனைவி பிரதீபா, விக்ரமாதித்யா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், வீரபத்ர சிங் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத் துறை முதலில் வீரபத்ர சிங், பிரதீபா, யுனிவர்செல் ஆப்பிள் அசோசியேட் நிறுவன உரிமையாளர் சன்னி லால் சௌஹான், எல்ஐசி நிறுவன முகவர் ஆனந்த் சௌஹான், பிரேம் ராஜ், லவன் குமார் ரோச் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையை, தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றியது.
இதையடுத்து வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், வீரபத்ர சிங்கை கைது செய்வதற்கு சிபிஐக்கு தடை விதித்தது. அதேநேரத்தில், சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு வீரபத்ர சிங் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.