பனாஜி: மது அருந்தி விட்டு கட்டுப்பாடாக இருக்கத் தெரியாத சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வர வேண்டாம் என்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கோவா மாநில சட்டப்பேரவையில் வியாழனன்று கேள்வி நேரத்தின் பொழுது மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்காங்கர் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
போதை மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் கடற்கரையில் பாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புவதில்லை.அவர்கள் நமது கலாச்சாரத்தினைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
கோவா மாநிலத்தினைச் சேர்ந்த ஒருவர் மது அருந்தி விட்டு சாலையில் நடந்து செல்கிறார் என்றால் அவர் அலைந்து திரியாமல் அமைதியாக நடந்து செல்வார். மது அருந்தவது மற்றும் பொது இடத்தில் துப்புதல் மூலம் அசுத்தப்படுத்துவது உள்ளிட்ட செயல்கள் பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. இத்தகைய சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று கோவா மாநில அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மது அருந்துதல் மற்றும் பொது இடத்தில் அசுத்தப்படுத்துவது உள்ளிட்டவற்றை கோவாவில் தடை செய்வதற்கு மாநில அரசு உத்தேசித்திருக்கும் சமயத்தில் அமைச்சரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.