கொல்கத்தா: மேற்கு வங்கத்தை 'பங்ளா' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் முன்னெடுப்பில் மேற்கு வங்கத்தை 'பங்ளா' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம், அம்மாநில சட்டப்பேரவையில் வியாழனன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இனி அம்மாநிலம் 'பங்ளா' என்றே அழைக்கப்படும்.
மாநிலங்களின் பெயர்ப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்தினை முன்னுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த தீர்மானமானது மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
முன்னதாக 2011-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி அம்மாநிலத்தை 'பஸ்சிம் பங்கோ' என்று பெயர் மாற்றம் செய்ய எடுத்த முயற்சிகளும், பின்னர் பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனி பெயர்களில் அழைக்க எடுத்த முயற்சிகளும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.