புது தில்லி: இந்தியாவுக்கு அதிக அளவில் வரும் தமிழக அகதிகள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பேசியதால் குழப்பம் உண்டானது.
நாடாளுமன்றம் செவ்வாயன்று கூடியதும் பல்வேறு துணை கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். அதில் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வந்து சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பற்றி பதிலளித்து வந்தார்.
அப்பொழுது அவர் தமிழகம், வங்க தேசம் மற்றும் மியான்மரில் இருந்து அதிக அளவில் இந்தியாவிற்கு அகதிகள் வருவதாகக் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சின் காரணமாக அதிமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அவருக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பினர்.
உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இலங்கையில் இருந்து வரும் தமிழ் அகதிகள் என்பதற்கு பதிலாக வாய் தவறி தமிழக அகதிகள் என்று குறிப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். அதனையேற்று சபாநாயகரும் விளக்கமளிக்க கூச்சல் குழப்பம் ஓய்ந்தது. இதன் காரணமாக அவையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.