புபனேஸ்வர்: பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினை ஒடிஷா அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மாநில தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று 'கோபபந்து சம்பதிகா ஸ்வஸ்தியா பிமா யோஜனா' என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக பணியில் இருக்கும் 3233 பத்திரிகையாளர்களுக்கு, ஆண்டுக்கு ரூ 2 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும். குறிப்பிட்ட பத்திரிகையாளரின் குடும்பத்திலிருந்து குறைந்தபட்சமாக ஐந்து பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.
பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கான சுகாதாரக் காப்பீட்டு அட்டையினை மாவட்ட செய்தி மற்றும் தகவல் தொடர்பு அலுவலரிடம் இருந்து பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து புபனேஸ்வர் சார்ந்த பத்திரிகையாளர்கள் மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் பணியில் இருக்கும் பொழுது பத்திரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவரிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.