புது தில்லி: ஏர்செல்-மேக்ஸிஸ் கறுப்புப் பண முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை கைது செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்கக் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கான தடையை ஜூலை 10-ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்தது.
இந்நிலையில், ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை சுமார் 7 மணிநேரம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளது.
முன்னதாக, ரூ.3,500 கோடி ஏர்செல்-மேக்ஸிஸ் அந்நிய முதலீட்டிலும், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ரூ.305 கோடி அளவிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டு முதலீடு அனுமதி ஒப்புதல் அளிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.