அம்பிகாபூர்: நாங்கள் ஒழிக்க நினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை மட்டுமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
கட்சிக்கான ஆதரவை பலப்படுத்துவது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அதன்படி அம்பிகாபூர் நகரில் திங்களன்று காலை அமித் ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நான் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடத்தியதாக ஊடகங்கள் கருத வேண்டாம். நாங்கள் ஒழிக்க நினைப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸ் கலாச்சாரத்தை மட்டுமே. காங்கிரஸ் கலாச்சாரம் என்ற ஒன்றில் இருந்துதான் நாட்டை விடுவிக்க எண்ணுகிறோம்.
ராகுல் காந்தி மக்கள் முன் சில பிரச்சினைகளை முன்வைத்தார் அதற்கு நான் பதில் சொல்ல முயன்றேன். எனவே இதை தனிப்பட்ட தாக்குதலாக கருத வேண்டாம். ஜனநாயகத்தில் யாரும் ஆபத்து இல்லை. எங்கள் கட்சி சரியான வேலையைச் செய்து வருகிறது. அதையே நாங்கள் தொடர்ந்து செய்து வந்தால் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்.
காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரது குடும்பமே தொடர்ந்து 55 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறது. எனவே நான் ராகுல் காந்தியை நான்கு தலைமுறைகளின் பிரதிநிதியாக கொண்டே கேள்வி கேட்கிறேன். பாஜகவில் பதில் சொல்லும் விதமாக, அதன் தலைவராக நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.