போலி நிறுவனங்கள் பின்னணியில் இருப்பது நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள்தான்: பி.பி.செளதரி 

இந்தியாவில் உள்ள போலி நிறுவனங்களின் பின்னணியில், நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்களே இருப்பார்கள் என்று மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி கூறியுள்ளார்.
போலி நிறுவனங்கள் பின்னணியில் இருப்பது நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள்தான்: பி.பி.செளதரி 

இந்தியாவில் உள்ள போலி நிறுவனங்களின் பின்னணியில், நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்களே இருப்பார்கள் என்று மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யவும் மத்திய அரசு விரும்புகிறது. நீண்டகாலமாகச் செயல்படாமல் இருக்கும் சுமார் 2.25 லட்சம் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். அதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலமாக, அவற்றின் நிதிப் பரிமாற்றங்கள் குறித்தும், அவற்றுடன் தொடர்புடைய முதலாளிகள் குறித்தும் தகவல் கிடைக்கும்.
அந்த ஆய்வுகளின் முடிவில் நிச்சயம் பெரிய அளவிலான விவரங்கள் வெளிவரும் என்று தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். அது, தனி நபர் தொடர்புடையதாகவோ, அரசியல் கட்சிகள் தொடர்புடையதாகவோ இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அது, நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்களுடன் தொடர்புடையதாக இருக்கும்.
நிறுவனத்தின் விதிகளானது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதேவேளையில், நிறுவன செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. நிறுவனங்களில் சுயாட்சித் தன்மை இருக்க வேண்டும் என்றாலும், அவை முதலீட்டாளர்களின் நலனுக்கானதாக மட்டுமே இருக்கக் கூடாது. சட்டத்துக்கு உள்பட்டு செயல்படுமாறு நிறுவனங்களை வலியுறுத்துகிறோம்.
சட்டங்கள் பழையதோ, புதியதோ, அவற்றின் விதிகளுக்கு உள்படாத நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுபோன்ற சட்டங்களை காங்கிரஸ் அரசு பயன்படுத்தவில்லை என்பதாலேயே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் போலி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன. 2.25 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அவற்றில் 1.68 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் 73,000 நிறுவனங்கள் ரூ.24,000 கோடியை டெபாசிட் செய்துள்ளன. 58,000 நிறுவனங்கள் குறித்து பல்வேறு வங்கிகளில் இருக்கும் தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று பி.பி.செளதரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com