நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் விரைவில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநில அரசும், டாடா அறக்கட்டளையும் இணைந்து மாநிலத்தில் 19 மருத்துவமனைகளை கட்டவுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு அமித் ஷா பேசியதாவது:
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டிருந்தன. ஆனால், இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி, இந்தப் பகுதி மாநிலங்களை வளர்ச்சியில் பின்தங்க வைத்து விட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்ற உள்ளன. மோடி எப்போதும் வடகிழக்குப் பிராந்தியத்தை அஷ்ட லட்சுமியாகக் கருதுகிறார்.
ஆகவே, இங்கு சாலை, ரயில் போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில் துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று அமித் ஷா கூறினார்.
நிகழ்ச்சியில், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெமா காண்டு கோரிக்கை:
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, தங்களது மாநிலத்திலும் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க ரத்தன் டாடாவிடம் கோரிக்கை விடுத்ததார்.
அதனை ஏற்ற ரத்தன் டாடா, அருணாசலப் பிரதேசத்தில் 2 புற்றுநோய் மருத்துவ மையங்களை அமைக்க ஒப்புக் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன.