திருநங்கை என்பதால் வங்கியில் வீட்டுக் கடன் தர மறுப்பு - திருநங்கை செயற்பாட்டாளர்
பத்மஷாலி என்பவர் கர்நாடகாவில் திருநங்கை செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் வாசு என்பவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அதன்மூலம் கர்நாடகாவில் பதிவுத் திருமணம் செய்த முதல் திருநங்கை என்ற தனித்துவம் பெற்றார். இவர் திருமணம் செய்துகொண்ட வாசு என்பவரும் பிரபல திருநங்கை செயற்பட்டாளர்.
இவர், கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், புதியதாக வீடு வாங்குவதற்காக பணம் சேர்த்து வருகிறார். தனது தாயாரின் நகை, நண்பர்கள் மற்றும் நிதி மூலம் 3-இல் 2 பகுதி தொகையை திரட்டிவிட்டார். அவருக்கு இன்னும் 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அதனால், அவர் வீட்டுக் கடன் கோரி வங்கியை நாடியுள்ளார். அப்போது அவர் திருநங்கை என்பதால் வங்கி அவருக்கு வீட்டுக் கடன் தர மறுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "எனது வீட்டுக்கான ஒப்பந்தம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், நான் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறேன். அதனால், நான் வங்கியை நாடினேன். ஆனால், நான் திருநங்கை என்பதால் எனக்கு 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் தர அவர்கள் மறுத்துவிட்டனர்.
நான் மீண்டும் பாலியல் தொழிலுக்கு செல்ல விரும்பவில்லை. எனக்கு, கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான தகுதி இருக்கிறது.
நீரவ் மோடி பல கோடி ரூபாய் பெற்று நாட்டில் இருந்து தப்பித்து செல்லலாம். நேர்மையான மக்கள் வீடு வாங்க ஏன் கடன் பெறக் கூடாது. அதனால், வங்கிகள் முன் வந்து எனக்கு கடன் வழங்கி பாகுபாடு பார்க்கமால் இருப்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும்.
நான் திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி பல இன்னல்களை கடந்து வந்துள்ளேன். இந்த சமூகத்தில் இவர்களும் (திருநங்கைகளும்) வீடு வாங்கலாம் என்பதை உணர்த்த வேண்டும்" என்றார்.