மத்தியப் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங், மலிவான அரசியலில் ஈடுபடுவதாக முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கிற்கு சரோஜா குமாரி என்ற மனைவியும், அபிமன்யூ சிங், அஜய் சிங் என்ற மகன்களும் உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவரான அஜய் சிங், மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், தமது மகன்கள் இருவரும் தமக்கு தொந்தரவு அளிப்பதாகவும், வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் புகார் தெரிவித்து, முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரோஜா குமாரி கடந்த செவ்வாய்க்கிழமை மனு அளித்தார். இந்த மனு மீது அடுத்த மாதம் 19-ஆம் தேதி விசாரணை நடைபெறவிருக்கிறது.
இதனிடையே, தமது தாயார் புகார் அளித்ததன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக அஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, செஹூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் செளஹான் புதன்கிழமை கூறியதாவது: அஜய் சிங்கின் தாயார் அவருக்கு எதிராக புகார் தெரிவித்திருப்பது குறித்து அரசை எப்படி அவர் குற்றம்சாட்ட முடியும்? இது மலிவான எண்ணம்.
இந்த உலகில் தாயை தவிர உயர்ந்த செல்வம் வேறெதுவும் இல்லை. மறைந்த தேசியத் தலைவர் அர்ஜுன் சிங் மனைவியான சரோஜா குமாரிக்கு தற்போது 83 வயதாகிறது. அரசுக்கு ஆதரவாக அவர் இப்படி செயல்படுவாரா? இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் மலிவானது. தேவையற்ற குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்காமல், தாயாரை வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தேவைகளை கவனித்துக் கொள்ளுமாறு அஜ்ய சிங்கிற்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்றார் செளஹான்.