பாட்னா: காவலர்களுக்கு இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த 14 வயது சிறுவன் மீது, இரு சக்கர வாகனம் திருடியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளிய சம்பவம் பிகாரில் நடந்தேறியுள்ளது.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு பியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இந்த சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தனது மகனை சிறையில் இருந்து விடுவிக்க காவல்துறையினரின் உதவியை நாடி எந்த வழியும் கிடைக்காத அந்த அப்பாவி தந்தை, இறுதியாக பிகார் முதல்வருக்கு மனு கொடுத்த பிறகே இந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து அவரது தந்தை கூறுகையில், நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். என் கடையில் அவ்வப்போது காவலர்கள் இலவசமாக காய்கறி வாங்கிச் செல்வார்கள். இது எனது மகனுக்குப் பிடிக்காது. ஒரு நாள் நான் கடையில் இல்லாதபோது மகன் காவலர்களுக்கு இலவசமாக காய்கறிகளைக் கொடுக்க மறுத்துவிட்டான்.
அதனால், அவனை பைக் திருடியதாக பொய் வழக்குப் போட்டு, சிறுவன் என்பதையும் மறைத்து சிறையில் அடைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தது நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.