புது தில்லி: பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு நான்காவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஆலோசனை செய்ய, அம்மாநில முதல்வர் பினரயி விஜயன் மற்றும் அனைத்துக்கட்சிகள் குழு பிரதமர் மோடியிடம் சந்திக்க நேரம் கேட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி மறுத்த பிரதமர் அலுவலகம், தேவைப்பட்டால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்க முதல்வர் பினரயி விஜயன் விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக கேரள மாநில முதல்வர் அலுவலக தகவலின்படி பிரதமரை சந்திக்க ஜூன் 16 மற்றும் 21-ம் தேதிகளில் நேரம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகம் அதனை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அதே போல பிரதமர் அலுவலகம் கேரள மாநில அனைத்துக் கட்சி குழுக்களுக்கும் பிரதமரை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.