நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் லஷ்மி ரெட்டி என்பவர் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், எஸ். லஷ்மி ரெட்டிக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரது வீட்டில் நேற்று சோதனை செய்து ஏராளமான சொத்து ஆவணங்களைக் கைப்பற்றினர். அதில் 60 ஏக்கர் விவசாய நிலம், சொகுசு பங்களாக்கள், முதலீட்டு ஆவணங்களும் அடங்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஷ்மி ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு மின்சார வாரியத்தில் உதவியாளராக சேர்ந்த லஷ்மி ரெட்டிக்கு தற்போது 56 வயதாகிறது.
ஆந்திராவில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு நெல்லூர் மாவட்டம் முதன்மையானதாக விளங்குகிறது. ஏற்கனவே நெல்லூரில் போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் பியூனாக இருந்த நரசிம்ம ரெட்டியிடம் இருந்து ரூ.100 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.