இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தி நேற்றுடன் (செவ்வாய்கிழமை) 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை, பாஜக கட்சியினர் இந்தியாவுக்கு ஏற்பட்ட கறை என்று பல குற்றச்சாட்டுகளை நேற்று முதல் சுமத்தி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,
"4 ஆண்டுகளுக்குப் பிறகு 2019 தேர்தலின் தோல்வி பயம் அரசை உலுக்குகிறது. அதனால் தான் 1975 அவசர நிலையை வைத்து அடைக்கலம் தேடுகின்றனர். ஆனால், 1977-இல் இந்திரா காந்தி மன்னிப்பு கோரினார், தவறுகளை திருத்திக்கொண்டார், மேலும் மக்களும் அவருக்கு திருப்பி வாக்களித்தனர்.
கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு பாஜக மன்னிப்பு கோருமா? மக்கள் பயமுறுத்தப்பட்டனர், விசாரணையின்றி கொல்லப்பட்டனர், ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்பட்டன, பொருளாதார சுதந்திரங்களுக்கு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது."
இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.