சமீபகாலங்களில் எல்லைப்பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் பரவியுள்ள பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அங்கு பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல் சம்பவத்தால் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தளபதி பிபின் ராவத் கூறியதாவது:
மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு ஏற்படுத்தியுள்ள திட்டங்களின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான விதிகளின் அடிப்படையில் ராணுவம் செயல்பட்டு வருகிறது. இனியும் இந்த நடவடிக்கைகள் தொடரும். இதில் எவ்வித மாற்றங்களும் இருக்காது.
இங்கு ராணுவம் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் அத்துமீறி செயல்பட்டு வருவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சிலர் இதுபோன்ற தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழிக்கும் விதமாக மட்டுமே இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவே எங்களின் நோக்கமும் கூட. அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடாத யாருக்கும் இந்திய ராணுவத்தால் எவ்வித தொந்தரவும் இருக்காது என்றார்.