ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறதா ஸ்ரீதேவியின் அஸ்தி?
சென்னை: கடந்த வாரம் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக மும்பை ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
உறவினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக துபை சென்றிருந்த ஸ்ரீதேவி, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு திடீரென உயிரிழந்தார். அதையடுத்து, அவரது உடல் பிரதே பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானத்தில் மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக மும்பை ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் ராமேசுவரம் சென்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க உள்ளதாகவும், அநேகமாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது அஸ்தி கரைக்கப்படலாம் என்றும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.