திரிபுரா மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

திரிபுரா மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

3 மாநில மக்களும் பாஜக-வுக்கு அளித்துள்ள மகத்தான ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் இழுபறி நீடித்து வருகிறது.

திரிபுராவில் 41 இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதன்மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாஜக-வை ஆதரித்தமைக்காக திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற அவர்களின் கனவுகள் நிறைவேறும் விதமாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். திரிபுராவின் வளர்ச்சிக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

2018 திரிபுரா தேர்தல் வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும். அம்மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் செய்த காரியத்தை என்னால் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. அவர்களின் இந்த செயலுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை. இது சாதாராண வெற்றியல்ல. இங்கு நாம் பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு வந்துள்ளோம்.

இது அத்தனைக்கும் நம் கட்சியின் சிறந்த கட்டமைப்புதான் காரணம். இதற்காக உழைத்த ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி உங்களின் இத்தனை ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலன்.

இந்த வெற்றி நம் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. இது ஜனநாயகத்தின் வெற்றி. இந்த நாளில் பயங்கரத்துக்கு எதிராக அஹிம்சை வெற்றிபெற்றுள்ளது. திரிபுரா மக்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும் கிடைக்கும் படி பாஜக ஆட்சி நடைபெறும். 

மேகாலயா மக்களின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வள்ர்ச்சி எங்களுக்கு மிக முக்கியம். இங்கு மக்களின் சேவையில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுபோல எங்களுக்கு வாய்ப்பளித்த நாகாலாந்துக்கு நன்றி. நாகாலந்தின் மேன்மைக்காக பாஜக-வின் பணி தொடரும். அயராது உழைத்த பாஜக தொண்டர்களுக்கு நன்றி.

ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய மக்கள் பாஜக-வின் வளர்ச்சி தொடர்பான ஆட்சி மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தேவையற்ற, கொடிய எண்ணங்களையும், தவறான சிந்தனைகளையும் மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com