கொல்கத்தா: கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 25 ஆண்டு காலமாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் கைவசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
உடனடியாக அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லெனின் அவர்களின் இரண்டு சிலைகள் அகற்றப்பட்டன. இது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு அருகே அமைந்திருக்கக் கூடிய கியோரட்டலா மின்மயானப் பகுதியில், ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
அந்த சிலையானது புதனன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலையின் முகத்தில் கரியும் பூசப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கிடைத்த போஸ்டர் ஒன்றில் 'அடிப்படைவாதிகள்' என்று எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.