மாவனா: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உடைக்கப்பட்டிருப்பது பதற்றத்தை உண்டாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 25 ஆண்டு காலமாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் கைவசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.
உடனடியாக அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லெனின் அவர்களின் இரண்டு சிலைகள் அகற்றப்பட்டன. இது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களால் செவ்வாய் அன்று இரவு சேதப்படுத்தப்பட்டது.
அதேபோல கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை செவ்வாய் இரவுசேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உடைக்கப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை உண்டாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ளது மாவனா என்னும் பகுதி. இங்கு அமைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர் அம்பேத்கரின் சிலையிலானது புதனன்று அதிகாலை அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது
காலை இது பற்றிய தகவல் தெரிய வந்ததும் அப்பகுதி தலித் மக்கள் பெருமளவில் கூடி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கு வந்து சேர்ந்த அதிகாரிகள் சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் புதிய சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது.