உத்தரப் பிரதேச மாநிலம், பலியா அருகே ஆஞ்சநேயர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து நக்ரா நகர காவல் நிலைய அதிகாரி ராம் தினேஷ் திவாரி, வியாழக்கிழமை கூறியதாவது:
இங்குள்ள காரூவ் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலையை சில மர்ம நபர்கள் புதன்கிழமை இரவு சேதப்படுத்தினர். மேலும், அந்தச் சிலையின் மீது போஸ்டர் ஒன்றையும் அவர்கள் ஒட்டிச் சென்றுள்ளனர். கிராம ஊராட்சித் தலைவர் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார் அவர்.
திரிபுராவில் லெனின் சிலை செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரியார் சிலை, சட்டமேதை அம்பேத்கர் சிலை, ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை, மகாத்மா காந்தி சிலை என பல்வேறு தலைவர்களின் சிலைகள் ஆங்காங்கே சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், மக்கள் வணங்கும் தெய்வமான ஆஞ்சநேயரின் சிலை சேதப்பட்டுள்ளது.