உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்கக் கோரி டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 9) தீர்ப்பு வழங்க உள்ளது.
இது தொடர்பாக வி.கே. சகிகலாவை உள்ளடக்கிய டி.டி.வி. தினகரன் அணி சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்புக்கு, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி முன் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி.டி.வி. தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரையிலும் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற தாமதம் எங்கள் அணியின் அரசியல் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று வாதிட்டனர். வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், குக்கர் சின்னம் கோரும் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரேகா பாலி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.