ஜெய்ப்பூர்: பன்னிரண்டு வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யும் மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் 2016-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி ராஜஸ்தான் மாநிலத்தில் சிறார்களுக்கு எதிரான குற்றமானது பரவலாக அதிகரித்து உள்ளது தெரிய வருகிறது. 2016-ல் மட்டும் சிறார்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 4,034 வழக்குகள் ராஜஸ்தான் முழுவதும் பதிவாகி உள்ளது. இது நாடு முழுவதும் மொத்தமாக பதிவாகிய வழக்குகளில் 3.8 சதவிதமாகும்.
அதற்கு முந்தைய ஆண்டில் சிறார்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக ராஜஸ்தானில் 3,689 வழக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யும் சட்டம் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில், அம்மாநில அமைச்சர் குலாப் சாந்த் காதாரியா, 'மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தானிலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து இது தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, வெள்ளியன்று மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதும் சட்டமாகும்.