தர்மசாலா: இமயமலை பயணத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வழியில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாபா ஆசிரமத்தில் அம்மாநில பாரதிய ஜனதா முன்னாள் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்.
தனது அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது படங்கள் சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து ஆன்மீகப் பயணமாக சனிக்கிழமை அன்று இமயமலை புறப்பட்டார். 15 நாட்கள் வரை அங்கு தங்க உள்ளதாக அவர் அறிவித்தார்.
சனியன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தில்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா போய்ச் சேர்ந்தார். தர்ம சாலாவையொட்டி பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் கன்ட்பாடி என்ற சிறிய மலை கிராமம் உள்ளது. அங்கு பாபா ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் அதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்று அங்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். தியான மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்த்தை இமாச்சலப்பிரதேச மாநில பாஜ தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமால் சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஜினியின் அரசியல் மற்றும் ஆன்மீக பயணம் இருவரும் உரையாடியதாகச் சொல்லப்படுகிறது. சந்திப்பின் பொழுது ஆசிரம நிர்வாகியும் சாமியாருமான பாபா அமர்ஜோதியும் உடனிருந்தார்.