உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை (மார்ச் 14) எண்ணப்படவுள்ளன. இத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பரம எதிரிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் கைகோத்திருப்பதால், தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் தொடர்ந்து 5 முறை யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் உள்பட 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பூல்பூரில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் போட்டியிடாத பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதியுடன் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டது. அதன்படி சமாஜவாதி வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தெரிவித்தது.