சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் மூலம் வாங்கிக் குவிக்கப்பட்ட ரூ.3,900 கோடி மதிப்புடைய பினாமி சொத்துகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். இதுதொடர்பான தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு மற்றும் பினாமி சொத்துத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு 22.69 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்குரிய வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களது வருமான வரிக் கணக்கு தாக்கல் விவரங்களும், வங்கிப் பரிவர்த்தனை தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. சுமார் ரூ.5.27 லட்சம் கோடி அந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தன. இதுதொடர்பாக அந்த நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து அதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது ஒருபுறமிருக்க, பினாமி சொத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக பினாமி சொத்துப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாக 1,600 வழக்குகளைப் பதிவு செய்து வருமான வரித் துறையின் விசாரித்து வருகின்றர். அவற்றில் 1,200 வழக்குகளில் தொடர்புடைய ரூ.3,900 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.