விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், வேளாண் மக்களின் கடன்சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண்துறை இணையமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனரா? எனக் கேட்கப்படுகிறது. அவ்வாறு எந்த ஒரு தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. மாறாக, ஜிஎஸ்டி நடைமுறையால் விவசாயிகள் அதிக பலன் அடைந்திருப்பதாகவே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுப்பதில்லை. அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளே அதற்கு காரணம். தொடர்ந்து கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியிட்டால் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு எளிதில் கடன் பெற இயலாத சூழல் உருவாகலாம். அல்லது வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வேண்டுமென்றே சில பெரு விவசாயிகள் தள்ளுபடிக்காகக் காத்திருக்கலாம். இத்தகைய நிலையைத் தவிர்க்கவே அரசு அந்த நிலைப்பாட்டில் உள்ளது.
அதேநேரத்தில், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதம் மட்டுமே அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை முறையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டியிலிருந்து மேலும் 3 சதவீதம் குறைத்து வழங்கப்படுகிறது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.