இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை சம்மன் அனுப்பி வரவழைத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் இந்திய அதிகாரிகள் துன்புறத்துவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இருக்கும் தெற்காசிய விவகாரத்துறை டைரக்டர் ஜெனரல் முகமது பைசல் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தார். அப்போது ஜே.பி. சிங்கிடம், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் இந்திய அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதற்கு, தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்த வெறுக்கத்தக்க சம்பவங்களில் இருந்து, தங்கள் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்திய அரசு போதிய விருப்பம் காட்டவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது எனவும் அவர் கூறினார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பலமுறை இதுகுறித்து முறையீடு செய்யப்பட்டு விட்டது, ஆனால் அதன்பிறகும் இந்த சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன என்றும் இந்திய துணைத் தூதரிடம் முகமது பைசல் தெரிவித்தார்.
வியன்னா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசுதான் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார் என்று அந்த அறிவிப்பில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.