பெங்களூரூ: நிர்பயாவின் தாயார் அழகான உடலமைப்பு கொண்டவர் என்று பெண்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றிலேயே கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கிலியானா பேசி இருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
சமுதாயத்தில் மகத்தான சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கும் விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. தில்லியில் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, பரப்பன அக்ரஹார சிறை அதிகாரியாக இருந்த ரூபா மற்றும் சிலருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கிலியானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:
இப்பொழுது நம் முன்னால் இருக்கும் ஆஷா தேவியின் உடலமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பான வகையில் அழகாக இருக்கிறது? அப்படியென்றால் அவரது மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார்? அழகாக இருப்பதே இப்படியான சிக்கல்களில் பெண்களைக் கொண்டு வந்து விடுகிறது
அது மட்டுமல்லாது பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால் அவர்களிடம் எதிர்ப்பு காட்டி சண்டையிடாமல் பெண்கள் சரணடைந்து விடுங்கள். அதன்மூலம் உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன் பின்னர் அந்த வழக்கினை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார். பெண்கள் கூடி இருந்த அவையில் சங்கிலியானா இவ்வாறு பேசியிருப்பது அனைவருக்கும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது.