இணையவழியிலான பணப் பரிவர்த்தனை, பற்று அட்டை மற்றும் கடன் அட்டை ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.71.48 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் தொடர்பாக 1,785 புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறியதாவது:
கடந்த ஆண்டில் மட்டும், கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் இணைய வழியிலான பணப் பரிவர்த்தனைகளின்போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 1,785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.71.48 கோடி அபகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் 187 முறைகேடு புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், அதே மாதத்தில் ஏடிஎம் இயந்திரங்களிலும், ஸ்வைப் இயந்திரங்களிலும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.3.46 லட்சம் கோடி எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது டிசம்பரில் 0.009 சதவீத அளவுக்கே முறைகேடுகள் நடந்துள்ளன.
முறைகேடுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது என்று அல்போன்ஸ் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "வங்கியின் இணையப் பக்கத்தில் நுழைவதற்கான பயனாளர்களின் பெயர் மற்றும் ரகசியக் குறியீட்டு எண்கள் ஆகியவற்றை தெரிந்துகொண்டும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் செல்லிடப்பேசிக்கு ஒரு முறை வரும் கடவுச்சொல்லை பயனாளர்களிடம் ஏமாற்றி பெற்றும் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை 30,222 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன' என்றார்.